எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 25 ஜூலை, 2011

நெல்லை தாமிரபரணி ஆற்றில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி!

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தாக்குதலுக்கு பயந்து ஆற்றுக்குள் குதித்ததில் 17 பேர் இறந்தனர்.

இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
 தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன்,  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, பாஜ உள்ளிட்ட பல்வேறு தாழ்த்தப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து, அஞ்சலி செலுத்தினர். மாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்துகிறார்.

ஒவ்வொரு கட்சியினருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும்  நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதியம் 1 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினார்.  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் பகல் 12 மணிக்கு வண்ணார்பேட்டையிலிருந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு அரசியல் கட்சியினர் ஒரே இடத்தில் குவிந்துள்ளதையடுத்து நெல்லையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மார்ஷ்டன்லியோ மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் லயோலா இக்னேஷியஸ், ஸ்டாலின், ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், ஆற்றுப்பாலம் மற்றும் ரயில்நிலையம், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிரடிப்படை மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக