எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 22 ஜூன், 2012

ஓட்டப்பிடாரத்தில் ஆய்வுக் கூட்டம்






ஓட்டப்பிடாரம், ஜூன் 21: ஓட்டப்பிடாரத்தில், கிராம நிர்வாக அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, பொதுமக்களிடம் குறைதீர்க் கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்றுள்ளார். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி வட்ட அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டதாம்.  பின்னர் அந்த மனுக்கள், அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டதாம். இருப்பினும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.  இத்தகைய போக்கை கண்டித்து ஜூலை 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளதாக கிருஷண்சாமி எம்எல்ஏ அறிவித்தார்.  இதற்கிடையே, அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.அமிர்தஜோதி தலைமை வகித்தார்.  வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் காளிமுத்து உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தகுதி வாய்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதிக்குள் எடுத்து புள்ளி விவரத்துடன் வழங்க வேண்டுமென கூட்டத்தின்போது உத்தரவிடப்பட்டது.

ஜூலை 9-ல் முற்றுகை போராட்டம்: கிருஷ்ணசாமி

  தூத்துக்குடி, ஜூன் 20: மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 9-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறினார்.  தூத்துக்குடியில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:  தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியில் பெரும்பான்மையான மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிலப்பட்டா மாற்றத்தை, வீட்டுமனை பட்டா வழங்குவதுபோல் கணக்கு காட்டப்படுகிறது. இதுபோல் முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவித்தொகை கேட்டு மனு அளித்து வருகின்றனர். ஆனால், அவர்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த மே 20, 21 தேதிகளில் நடைபெற்ற மனுநீதி நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினேன். இதுவரை அந்த மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 10, 15 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் கிடைக்கிறது. எனவே இதைக் கண்டித்து ஜூலை 9-ம் தேதி எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.